ஞாயிறு, நவம்பர் 30, 2008

கொங்கு மங்கலவாழ்த்து

கம்பர் கொங்குவேளாளர் குடியோடு தங்கி நெடுங்காலம் வாழ்ந்தவர். அவர்கள் வீட்டுத் திருமணத்தில் தவறாது கலந்து கொண்டு வாழ்துரை வழங்கியவர். கம்பர் சொன்ன வாக்காகக் கொங்கு நாவிதன் மங்கல வாழ்த்தை வழிவழியாகப் பாடி வருகின்றான். கொங்கு நாவிதனின் மங்கல வாழ்துரை கொங்கு வேளாளர் திருமணத்தில் முத்தாய்ப்பாய் அமைந்திருக்கும்.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய மங்கலவாழ்த்து

காப்பு (வெண்பா)
நல்ல கணபதியை நாம் காலமே தொழுதால்
அல்லல்வினையெல்லாம் அகலுமே சொல்லரிய
தும்பிக்கை யோனைத் தொழுதால் வினைதீரும்
நம்பிக்கை உண்டே நமக்கு.

அகவல்பா:
அலைகடல் அமிர்தம் ஆரணம் பெரியவர்
திங்கள் மும்மாரி செல்வம் சிறந்திட
கந்தன் இந்திரன் கரிமா முகத்தோன்
சந்திரர் சூரியர் தானவர் வானவர்
முந்திய தேவர் மூவருங் காத்திட
நல்கலி யாணம் நடந்திடும் சீர்தனில்
தப்பித மில்லாமல் சரஸ்வதி காப்பாய்
சீரிய தினைமா தேனுடன் கனிமா
பாரிய கதலிப் பழமுடன் இள நீர்
சக்கரை வெல்லம் தனிப்பலாச் சுளையும்

மிக்க தோர் கரும்பு விதவிதக்கிழங்கு
எள்அவல் நற்பொரி இனித்தபாகுடனே
பொங்கல் சாதம் பொரிகறி முதலாய்
செங்கை யினாலே திரட்டிப்பிசைந்து
ஆரமுது அருந்தும் அழகு சிறந்த
பேழை வயிற்றுப் பிள்ளைகணபதியே
அடியேன் சோதனை அவனியில் குறித்துக்
கடுகியே வந்தென் கருத்தினில் நின்று
நினைத்த தெல்லாம் நீயே முடித்து
மனத்துயர் தீர்ப்பாய் மதகரி சரணம்

மங்கல வாழ்த்தை மகிழ்ச்சியாய் ஓத
என்குரு நாதன் இணையடி போற்றி
கிரேதா திரேதா துவாபரம் கலியுகம்
செம்பொன் மகுடம் சேரன் சோழன்
பாரமா முடியும் பாண்டியன் என்னும்
மூன்று ராஜாக்களும் ராஜ்யம் ஆள்கையில்
கருவுரு வாகித் திருவதி அவள்புகழ்
சிறந்த மானிடம் தாயது சுத்தம்
வாழ்வது பொருந்தி செம்மையுடனே சிறந்திடுங்காலம்
இந்திரன் தன்னால் இங்குவந்த நாளில்

பக்குவமாகிப் பருவங் கண்டு
திக்கில் உள்ள பேர்கள் சிலபேருங் கூடி
வேதியன் பக்கமே விரைவுடன் சென்று
சோசியரை யழைத்து சாஸ்திரங் கேட்டு
இந்த மாப்பிள்ளை பேர்தனைக் கூறி
இந்தப் பெண்ணின் பேர்தனைச் சொல்லி
இருவர் பேரையும் ராசியில் கேட்டுக்
கையில் ஓடிய கைரேகைப் பொருத்தம்
ஒன்பது பொருத்தம் உண்டாவெண்று பார்த்துத்
தாலிப் பொருத்தம் தவறாமல் கேட்டு

வாசல் கௌரி வலிதென நிமித்தம்
தெளிவுடன் கேட்டுச் சிறியோர் பெரியோர்
குறிப்புச் சொல்லும் குறிப்புரை கேட்டு
உத்தம பாக்கியம் தச்சனைக் கேட்டு
பொருந்தி யிருத்தலால் பூரித்து மகிழ்ந்து
சிலபேருடனே சீக்கிரம் புறப்பட்டு
மச்சினன் ஊருக்கு வண்டியில் சென்று
வெண்கல முரசு வீதியில் கொட்டத்
தங்க நகரி தானலங் கரித்து
முத்துக்கள் தன்னை முசம்பரக் கொட்டி

சித்திரக் கூடம் சிறக்கவே விளக்கி
உரியவர் வந்து உன்மகளுக்கென்று சொல்லி
பிரிய முடன்வெற்றிலை மடிதனில் கட்டி
நாளது குறித்து நல்விருந்துண்டு
பூட்டு தாலிக்குப் பொன்னது கொடுத்து
வாழ்வது மனைக்கு மனமகிழ வந்துமே
கற்றோர் புலவர் கணக்கரை யழைத்துத்
தேன் பனை யோலை சிறக்கவே வாரி
திசை திசையெங்கும் தென்னவரை அனுப்பி
கலியாண நாளைக் கணித்து அறிவித்தார்

வழை நமுகு மகமே ருடனே
சோலை இலையால் தோரணங் கட்டி
மூத்தோர் வந்து மெழுகி வழித்துப்
பார்க்குமிடமெங்கும் பால்களைத் தெளித்து
பெண்டுகள் வழங்கும் பெரிய கலத்தைக்
கொண்டு வந்ததனைக் குணமுடன் விளக்கி
நேரிய சம்பா அரிசியை நிறைத்துப்
பாரிய வெல்லம் பாக்கு வெற்றிலை
சீருடன் நெய்யும் தேங்காய் பழமும்
வாரியே வைத்து வரிசை குறையாமல்

முறைமைய தாகவே முக்காலி மேல்வைத்து
மணம் பொருந்திய மாப்பிள்ளை தனக்குக்
குணம் பொருந்திய குடிமகனை யழைத்து
போன மச்சம் முகமது துடைத்து
எழிலான கூந்தலுக்கு எண்ணை தனை இட்டு
குணமது சிவக்காய் கூந்தலில் தேய்த்துமே
ஏழு தீர்த்தம் இன்முடன் விட்டு
மேழம் உடனே விளாவியே வார்த்து
செந்நெல் சோற்றால் சீக்கடை கழித்து
வர்ணப் பட்டாடை வஸ்திரந் தன்னை

நொறுங்கக் கொய்து நேர்த்தியாய் உடுத்தி
மன்னவர் முன்னே வந்தவ ருடனே
வாசல் கிளறி மதிப்புடன் கூட்டி
சாணங்கு கொண்டு தரைதனை மெழுகி
கணபதி ஒன்றைக் கருத்துடன் நாட்டி
அருகது சூடி அருள் பொருந்திடவே
நிரமியதாகவே நிறை நாழிவைத்து
வெற்றிலை பழமும் விருப்பமுடன் வைத்து
அலைகடல் அமிர்தம் அவனியின் நீரும்
குழவிக்குக் கங்கணம் குணமுடன் தரித்து

களரியோர் மெச்சிடக் காப்பது கட்டி
குப்பாரி கொட்டிக் குலதேவதையை தானழைத்து
செப்பமுடன் மன்னவர்குத் திருநீற்றுககாப்பணிந்து
சாந்து சந்தனம் தண்ணீரும் பன்னீரும்
சேர்த்துச் கலக்கிச் சிறக்கவே பூசி
கொத்தரளி கொடியரளி கோத்திரத்து நல்லரளி
முல்லை இருவாட்சி முனைமுறியாச் செண்பகப்பூ
நாறும் கொழுந்தும் நந்தியா வட்டமும்
வேருங் கொழுந்தும் வில்வ பத்திரமும்
மருவு மரிக்கொழுந்தும் வாடாத புஷ்பங்களும்

புன்னை கொன்னை பூக்கள் எல்லாம்
கொண்டு வந்து கொண்டை மாலை
தண்டைமாலை சோபனமாலை சுடர்மாலை
ஆடை ஆபரணம் அலங்காரம் மிகச்செய்து
திட்டமுடன் பேழைதனில் சோறுநிறை நாளிவைத்து
நட்டுமுட்டுத் தான் முழங்க நாட்டார் சபைதனில்
நன்றாய் வலம்வந்து நலமதாய் நிற்கையிலே
செஞ்சோறு ஐந்தடை சிரமதைச் சுற்றியுமே
திஷ்டி கழித்துச் சிவசூரியனைக் கைதொழுது
அட்டியெங்கும் செய்யாமல் அழகு மனைக்குவந்து

மணவரை யலங்கரித்து மன்னவரைத்தானமர்த்தி
இணையான தங்கையரை ஏந்திழையைத் தானழைத்து
சந்தனம் புணுகு சவ்வாது மிகப்பூசி
மந்தாரை மல்லிகை மருக்கொழுந்து மாலையிட்டு
ஆடையாப ரணம் அழகுபெறத்தான்பூண்டு
கூறை மடித்துவைத்துக் குணமுள்ள தங்கையவள்
பேழைமூடி தான்சுமந்து பிறந்தவனைச் சுற்றிவந்து
பேழைதனை இறக்கிவைத்துப் பிறந்தவளை அதில்நிறுத்தி
கூறைச்சேலை ஒருதலைப்பைக் கொப்பனையாள் கைப்பிடித்து
மாப்பிள்ளை கக்கத்தில் மறுமுனையைத் தான்கொடுத்து

அருமைப் பெரியோர்கள் அழகுமாப்பிள்ளைகையை
அரிசியில் பதியம்வைத்து அங்கர னுக்குப் பூசைசெய்து
மங்கல வாழ்த்துக்கூற மணவறையில் குடிமகனுக்கு
செங்கையால் அரிசியள்ளி சிறக்கக்கொடுத்திடுவார்
குடிமகன் மங்கலவாழி கூறி முடிந்தவடன்
வேழமுகத்து விநாயகரின் தாள்பணிந்து
சந்திரரும் சூரியரும் சபையோர்கள் தானறிய
இந்திரனார் தங்கைக்கு இணைநோக்கி நின்றபின்பு
அடைக்காயும் வெற்றிலையும் அடிமடியிற் கட்டியபின்

முன்னர் ஒருதரம் விநாயகருக்கு இணைநோங்கி்
பின்னர் ஒருதரம் பிறந்தவர்க்கு இணைநோங்கி
இந்திரனார் தங்கைக்கு இணைநோக்கி நின்றபின்பு
தேங்காய் முகூர்த்தமிட்டுச் செல்வ விநாயகனைப்
பாங்காகக் கைதொழுது பாரிகொள்ளப் போறோமென்று
மாதா வுடனே மகனாரும் வந்திறங்கி
தாயாருட பாதம் தலைகுனிந்து தண்டனிடப்
போய்வா மகனே என்றார் பூங்கொடிக்கு மாலையிடப்
பயணமென்று முரசுகொட்டப் பாரிலுள்ள மன்னவர்கள்
மதகரி அலங்கரித்து மன்னவர்கள் ஏறிவர

தந்தை யானவர் தண்டிகை மேல்வர
தமையன் ஆனவர் ஆனையின் மேல்வர
நாடியே வந்தவர்கள் நட்சத்திரம் போலவர
தேடியே வந்தவர்கள் தேரரசர் போலவர
பேரணி முழங்க பெரிய நகரரடிக்க
பூரிதான் அதிர புல்லாங்குழல் ஊத
எக்காளம் சின்னம் இடிமுரசு பெரியமேளம்
கைத்தாள பம்பை கனகதப்பட்டை தான்முழங்கச்
துத்தாரி நாகசுரம் சோடிகொம்பு தானூத
சேகண்டி சங்கு திமிர்தாளம் பம்மையுமே

வலம்புரிச் சங்கு வகையாய் ஊதிவர
உருமேளம் பரமேளம் உரம்பை திடும்படிக்க
பலபல விதமான பக்கவாத்திய முழங்க
பல்லாக்கு முன்னடைக்க பரிசுகள் பறந்துவர
வெள்ளைக்குடை வெண்சாமரம் வீதியில் வீசிவரச்
சுருட்டி சூரியவாணம் தீவட்ட முன்னடக்க
இடக்கை வலக்கை இனத்தார்கள் சூழ்ந்துவர
குதிரை மீதமர்ந்து குணமுள்ள மாப்பிள்ளை தான்
சேனைகள் முன்னே சிறந்து முன்னடக்க
கட்டியங்கள் கூறிக் கவிவாணர் பாடிவர

நாட்டியங்கள் ஆடிவந்தாள் நல்ல தேவரடியாள்
பாகமாஞ் சீலைப் பந்தம் பிடித்திட
மேகவர்ணச் சேலை மின்னல்போல் மின்ன
அடியால் ஆயிரம் பேர் ஆலாத்தி ஏந்திவர
பெண்ணு வீட்டார்கள் பிரியமுடன் எதிர்வந்து
மன்னவர் தங்களை வாருங்கள் என்றழைத்து
வெகுசனத்துடனே விடுதியில் விட்டு வந்தார்
வாழ்வரசி மங்கைக்கு வரிசை அனுப்புவோமென்று
நாழியரசிக் கூடை நன்றாக முன்னனுப்பி
பொன் பூட்டப்போகிறவர் பேடை மயிலியற்கு

நல்ல முகூர்த்தம் நலமுடன் தான்பார்த்து
பெட்டிகளும் பேழைகளும் பொன்னும் சீப்புகளும்
பட்டுத்துணி நகையும் பார்க்கக் கண்ணாடியும்
சத்துச் சரப்பணி தங்கம்பொன் வெள்ளிநகை
முத்துச் சரப்பணி மோகன மாலைகளும்
திட்டமுள்ள மங்கையர்க்குத் திருப்பூட்டப் போறமென்று
அஷ்டதிக்கும் தானதிர அடியுமென்றார் பேரிகையை
அன்ன நடையாரும் அருமைப் பெரியவரும்
பொன்னு வளையல் கையால் பேழைமுடி தான்சுமந்து
இன்னும் சிலபெண்கள் இவர்களைச் சூழ்ந்துவர

நாட்டில்உள்ளசீர்சிறப்புநாங்கள் கொண்டுவந்தோமென்று
சென்றுஉட்புகுந்தார் திருப்பெண்ணாள் மாளிகையில்
கொண்டுவந்த அணிகலனைக் கோதையர்க்கு முன்புவைக்க
கண்டு் மகிழ்ந்தார்கள் கன்னியர்கள் எல்லோரும்
பூட்டினார் தோடெடுத்துப் பொன்னாள் திருக்காதில்
தங்கச் சங்கிலிதனை தான் கழுத்தில் இட்டார்கள்
அடைக்காயும் வெற்றிலையும் அன்பாக மடியில்கட்டி
ஆணிப் பெண்ணவளை அலங்கரித்துக் குலங்கோதி
சாந்துப் பொட்டிட்டு சவ்வாது மிகப்பூசி
ஊட்டுமென்றார் நல்லுணவை உடுத்துமென்றார் பட்டாடை

பொன்பூட்ட வந்தவர்க்குப் பூதக்கலம் தான்படைத்து
அன்பாக வெற்றிலை அடைக்காயுந் தான்கொடுத்தார்
தாய்மாமன் தன்னைத் தன்மையுட னேயழைத்து
சந்தனம் மிகப்பூசிச் சரிகைவேட்டி தான்கொடுக்கப்
பொட்டிட்டுப் பொன்முடிந்து பேடை மயிலியற்குப்
பட்டமும் கட்டினார் பாரிலுள்ளோர் தானறிய
ஆரணங்கு பெண்ணை அலங்கிருத மிகச்செய்து
மாமன் குடைபிடித்து மாநாட்டார் சபைக்குவந்து
வலமதாய் வந்து நலமதாய் நின்று
செஞ்சோர் ஐந்துஅடை சிரம்கால் தோளில்வைத்து

நிறைநாளி சுற்றியே நீக்கித் திஷ்டிகழித்து
அட்டியங்கள் செய்யாமல் அழகு மனைக்குவந்து
மங்கள கலியாண மணவரை யலங்கரித்து
அத்திஒரு துத்திப்பட்டு அனந்த நாராயணப்பட்டு
பஞ்சவர்ண நிறச்சேலை பவளவர்ணக் கண்டாங்கி
மாந்துளிர்சேர் பூங்கொத்து வர்ணமுள்ள பட்டாடை
மேலான வெள்ளைப்பட்டு மேற்கட்டுங்கட்டி
கட்டியே யிருக்கும் கனம்பெரிய வாசலிலே
அருமையுள்ள வாசலிலே அனைவோரும் வந்திறங்கிப்
பொறுமையுள்ள வாசல்தனைப் பூவால் அலங்கரித்து

சேரசோழ ராஜாக்கள் சேர்ந்திருக்கும் வாசலிலே
செம்பொன் மிகுந்தோர்கள் சிறந்திருக்கும் வாசலிலே
வீரலாக்ஷ்மி யவள் விளங்கிடும் வாசலிலே
விருதுகள் வழங்கிடும் விசேஷ வாசலிலே
தரணியில் அண்ணக்கொடி தழைத்திருக்கும் வாசலிலே
பன்னீராயிரம் பேர் பலர்சேர்ந்த வாசலிலே
நாற்கரசு நாட்டி நல்ல முகூர்த்தமிட்டுப்
பேய்க்கரும்பை நாட்டிப் பிறைமண்ணும் தான்போட்டு
சாலுங் கரகமும் சந்திரரும், சூரியரும்
அம்மி வலமாக அரசாணி முன்னாக

ஆயிரப் பெருந்திரி அதுவும் வலமாக
சுத்தமுடன் கலம்விளக்கிச் சோறரிசி பால்பழமும்
பக்தியுடன் நித்தனையும் பாரித்தார் மணவரையில்
மணவறை அலங்கரித்து மணமகனை அங்கிருத்தி
அழகு மணப்பெண்ணை அலங்காரம் மிகச்செய்து
மாமம் எடுத்து மணவறையை சுற்றிவந்து
மகிழ்ச்சியது மீதூற வலதுபுறம் தானிருத்தி
குலம்பெரிய மன்னவர்கள் குவலயத்தார் சூழ்ந்திருக்க
ராமன் இவரோ இலக்குமன் இவரோ
கண்ணன் இந்திரன் காமன் இவரோ

கார்முகில் இவரோ! காங்கேயன் இவர்தானோ!
என்றே பாரிலுள்ளார் ஏத்திப் பாராட்ட
அத்தை மகள்தனை அழகு் செல்வியை
முத்து ரத்தினத்தை முக்காலிமேல் அமர்த்திக்
கணபதி தெய்வமுன் கட்டும் மங்கிலியம் வைத்து
அருமைப் பெரியவர் அன்புடன் வழிபட்டு
மாப்பிள்ளை பெண்ணை மணவறையில் எதிர்நிறுத்தி
கெட்டிமேளம் சங்குநாதம் கிடுகிடென்று சப்திக்க
மாணிக்கம்போல் மாங்கல்யம் வைடூரியம்போல் திருப்பூட்டி
ஆரம்தனை யாற்றி அமர்ந்தபின் மணவறையில்

மாப்பிள்ளையின் மைத்துனரை வாவென்று தானழைத்து
கலம்பெரிய அரிசிதனில் கைகோர்வை தானுமிட்டு
சிங்கார அந்தத் தெய்வச் சபைதனிலே
கங்காகுலம் விளங்கக் கம்பர்சொன்ன வாழ்த்துரையை
மங்கலமும் கன்னிசொல்ல வாத்தியமெலாம் மடக்கி
மறையோர்கள் வேதம்சொல்ல மற்றவர்கள் ஆசிகூற
பிறைஆயிரம் தொழுது பிள்ளையார்க்குப் பூசைசெய்து
அருமைபெற்ற பெரியோர்கள் அருகுமணம் செய்தபின்பு
கைக்குக் கட்டின கங்கணமும் தானவிழ்த்து
தங்களுக்குத் தங்கள் தாரைக்கோர் பொன்கொடுத்து

உரியதோர் பாட்டன் இருவருட கைதனிலே
தண்ணீர் ஊற்றியே தாரையும் வார்த்தபின்பு
பிரியமுள்ள மணவறையைப் பின்னும் சுற்றிவந்து
மங்கலக் கலியாணம் வகையாய் முடிந்ததென்று
செங்கை யினாலே சிகப்பிட்டிரு வருக்கும்
சாப்பாடு போசனம் சந்தோஷ மாய்ப் போட
உண்டுபசி யாறி உறவுமுறை எல்லோரும்
கொண்டுவந்த பொன்முடிப்பைக் கொடுத்துச் செல்லுமென்றார்
மண்டலத்தோர் எல்லோரும் மணப்பந்தலில் அமர்ந்து
கலியாணத்தார் தன்னைக் கருத்துடனே யழைத்து
கண்ணாளர் தமையழைத்துப் பொன்னோட்டம் காணுமென்றார்

அப்போது கண்ணாளர் அவ்விடமே தானிருந்து
பணமது பார்த்துக் குணமது கழித்து
கல்லு வராகன் கருவூர்ப் பணமும்
வெள்ளைப் புள்ளடி வேற்றூர் நாணயம்
சம்மன் சட்டி சாத்தூர் தேவன்
உரிக்காசுப் பணம் உயர்ந்த தேவராயர்
ஆண்மாடை பெண்மாடை அரியதோர் பொற்காசு
ஒருமுழி முழிக்க ஒருமுழி பிதுங்க
பலவகை நாணயமும் பாங்காகத் தெரிந்து
முன்னூறு பொன்னு முடிப்பொன்றாய் முடிநதவுடன்

பாட்டன் இருந்து பரியம் செலுத்தினார்
பந்தல் கெளரி பாக்கியம் உரைக்க
மச்சினன் மார்கள் மகிழ்ந்து சூழ்ந்துநிற்க
சிற்றடிப் பெண்கள் சிறுசீர்கள் சுமந்துவர
சந்தோஷ மாகித் தங்கமுடி மன்னவர்கள்
பந்தச் சிலவு பலபேர்க்கும் ஈந்தார்கள்
ஆடுவான் பாடுவான் ஆலாத்தியுட் பட
நாடிவந்த பேர்களுக்கு நல்ல மனதுடனே
சகாயமென்ற பேர்களுக்கு தனிப்பணம் தான்கொடுத்து
வாழிப் புலவர்க்கு வரிசைதனைக் கொடுத்து

திடமுள்ள பந்தல்கீழ் வந்துநின்ற பேர்களுக்கு
அரிசி அளந்தார்கள் அனைவரும் தானறிய
கரகம் இறக்கிவைத்துக் கன்னி மணவாளனுக்கு
புடவை கொடுத்துப் பொற்பாய்த் தலைமுழுகி்
சட்டுவச் சாதம் தளிர்க்கரத்தால் பெண் மப்பிள்ளைக்கு
சாதம் பரிமாறி சாப்பிட்டு ஆனவுடன்
பண்ணை மாதிகனைப் பண்பாகத் தானழைத்து
வில்லை மிதியடிகள் மிக்கவே தொட்டபின்பு
காலும் வழங்கிக் கன்னியைத் தானழைத்து
மஞ்சள் நீராட்டி மறுக்க இரு அழைப்பழைத்து

மாமன் மார்களுக்கு மகத்தான விருந்து வைத்து
மங்கல சோபனம் வகையாய் முடித்தவுடன்
மாமன் கொடுக்கும் வரிசைதனைக் கேளீர்
துப்பட்டு சால்வை சோமன் உருமாலை
பஞ்சவர்ணக் கண்டாங்கி பவளநிறப்பட்டு சேலை
அத்தியடித் துத்திப்பட்டு ஆனையடிக் கண்டாங்கி
இந்திர வர்ணப்பட்டு ஏகாந்த நீலவர்ணம்
முறுக்கு வளையல்களும் முகமுள்ள கொலுசுகளும்
பதக்கம் சரப்பணி பகட்டான காசுமாலை
கட்டிலும் மெத்தையும் காளாங்கி தலையணையும்

வட்டில் செம்பும் வழங்கும் சமான்களும்
காளை வண்டியும் கன்றுடன் பால்பசுவும்
குதிரை பல்லாக்கு குறையாத பலபண்டம்
நிறையக் கொடுத்தார்கள் நேயத்தோர் தானறிய!

வாழ்த்துப்பாட்டு
ஆதி கணேசன் அன்புடன் வாழி
வெற்றி வேல்கொண்ட வேலவன் வாழி
வாணி சரஸ்வதி மகிழ்வுடன் வாழி
எம்பெருமானின் இணையடி வாழி
பாரத தேசம் பண்புடன் வாழி
மாது உமையவள் மகிழ்வுடன் வாழி
முப்பத்து முக்கோடி தேவரும் வாழி
நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகளும் வாழி
வேதம் ஓதிடும் வேதியர் வாழி
கொங்கு நாட்டுக் குடிகளும் வாழி

வாழியே யானும் மகிழ்வுடன் வாழி
என்குரு கம்பர் இணையடி வாழி
வையத்து மக்கள் மற்றவரும் வாழி
காராள குலத்திலகர் கவுணடர்களும் வாழி
வேளாளர் குலத்திலகர் விவசாயரும் வாழி
இந்தப்பாட்டுக் கேட்டவர் எல்லோரும் வாழியே
ஆல்போல் தழைதழைத்து அருகுபோல் வேறூன்றி்
மூங்கில்போல் கிளைகிளைத்து முசியாமல் வாழ்ந்திருக்க
வாழி மணமக்கள் வந்தோர் வாழ்த்துரைக்க!

புதன், நவம்பர் 26, 2008

பருத்திப்பள்ளி இருக்கும் இடம்



பருத்திப்பள்ளி இருக்கும் இடத்தை சுட்டி காட்டலாம்னு நினச்சு ஆரம்பித்தேன்..
மரப்பறை வரைக்கும் அடையாளம் கண்டுபிடிக்க முடியுது. அது வரைக்கும் தெளிவான படம் இருக்கு. அதுக்கு அப்புறம் குத்து மதிப்பாதான் பார்க்க முடியும்.




ஞாயிறு, நவம்பர் 09, 2008

கொங்கு வேளாளர் குலங்கள்

கொங்கு வேளாளர் குலம் அறுபது பிரிவுகளாகும். அவை,
1.அந்துவன், 2.ஆதி, 3.ஆந்தை, 4.ஆடர், 5.ஆவன், 6.ஈஞ்சன், 7.ஓதாளன், 8.கண்ணன், 9.கனவாளன், 10.காடை, 11.காரி, 12.கீரன், 13.குயிலர், 14.குழையர், 15.குணுக்கர், 16.கோகை, 17.கூறை, 18.கோவேந்தர், 19.சாத்தந்தை, 20.செல்லன், 21.செலையன், 22.செம்மன், 23.செங்கண்ணன், 24.செம்பூதன், 25.செழியர், 26.செங்குன்னியர், 27.செவ்வாயர், 28.சேரன், 29.சேடன், 30.தனஞ்செயன், 31.தேவேந்திரன், 32.தோடர், 33.நீடுண்ணியர், 34.பண்ணன், 35.பவளர், 36.பனையன், 37.பதுமன், 38.பயிரன், 39.பனங்காடர், 40.பதறியர், 41.பாண்டியன், 42.புல்லர், 43.பூசன், 44.பூதன், 45.பூச்சந்தை, 46.பெருங்குடி, 47.பெரியன், 48.பொருளாந்தை, 49.பொன்னன், 50.மணியன், 51.மயிலர், 52.மாடர், 53.முத்தன், 54.வண்ணக்கர், 55.வலையர், 56.வாணர், 57.வில்லியர், 58.விழியன், 59.வெள்ளம்பர், 60.வேண்டுழவர் என்பனவாகும்.

இவர்களில் செல்லன், விழியன், கண்ணன், பனையன், மணியன் குலத்தவர்களில் சிலர் மட்டும் வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்து பின்னாளில் கொங்கு நாட்டு வேளாளர் (நாட்டுக்கவுண்டர்) என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள் குலப்பிரிவு,

1.பருத்திப்பள்ளி செல்லன் குலம்,

2.ராசிபுரம் விழியன் குலம்,

3.மல்லசமுத்திரம் விழியன் குலம்,

4.திண்டமங்கலம் விழியன் குலம்,

5.மோரூர் கண்ணன் குலம்,

6.மொளசி கண்ணன் குலம்,

7.வெண்ணந்தூர் கண்ணன் குலம்,

8.ஏழூர் பண்ணை குலம்,

9.வீரபாண்டி மணியன் குலம்

என்று அழைக்கப்படுகிறது.